இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நோயில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று முதன்முதலில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவிக்கு இருப்பது உறுதியானது.

இதையடுத்து இந்தியாவில் காலூன்ற தொடங்கிய கொரோனா, ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் மெதுவாக பரவியது. பின்னர் மெல்ல மெல்ல வேகமெடுக்க தொடங்கி இப்போது காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்துக்கு சென்றுள்ளது.

1½ லட்சம் பேர் ‘டிஸ்சார்ஜ்’

கடந்த மாதம் முழுவதும் தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 4 இலக்க எண்களில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 5 இலக்கத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலானா 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இதில் 1,54,329 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 386 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,884 அதிகரித்துள்ளது.

3-ல் ஒரு பங்கு பாதிப்பு

நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பில் 3-ல் ஒரு பங்கு மராட்டிய மாநிலத்தில்தான் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டும் இந்த வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உள்ளது. இதில் 47,796 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 3,717 பேரின் உயிரை அங்கு கொரோனா பறித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,687 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409 ஆகவும், பலி எண்ணிக்கை 397 ஆகவும் இருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் 36,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 13,398 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 1,214 ஆக உள்ளது.

குஜராத்தில் 1,415 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. மேற்குவங்காளத்தில் 476 பேரும், மத்தியபிரதேசத்தில் 440 பேரும், உத்தரபிரதேசத்தில் 365 பேரும், ராஜஸ்தானில் 272 பேரும், தெலுங்கானாவில் 174 பேரும், ஆந்திராவில் 80 பேரும், கர்நாடகாவில் 79 பேரும், அரியானாவில் 70 பேரும், பஞ்சாபில் 63 பேரும், ஜம்மு காஷ்மீரில் 53 பேரும், பீகாரில் 36 பேரும், உத்தரகாண்டில் 21 பேரும், கேரளாவில் 19 பேரும், ஒடிசாவில் 10 பேரும், அசாம் மற்றும் ஜார்கண்டில் தலா 8 பேரும், சத்தீஸ்கார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 6 பேரும், சண்டிகாரில் 5 பேரும், புதுச்சேரியில் 2 பேரும், திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மக்களுக்கு ஆறுதல் தரும் விஷயம்

கொரோனா அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் அந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கைதான். அந்த வகையில், மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து குணமடைந்தவர்களின் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கை வருமாறு:-

குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள்- 22,527 (குணமடைந்தவர்கள்-15,493), உத்தரபிரதேசம் 12,616 (7,609), ராஜஸ்தான் 12,068 (8,898), மத்தியபிரதேசம் 10,443 (7,201), மேற்குவங்காளம் 10,244 (4,206), கர்நாடகா 6,516 (3,440), அரியானா 6,334 (2,475), பீகார் 6,103 (3,587), ஆந்திரா 5,680 (3,105), ஜம்மு காஷ்மீர் 4,730 (2,086), தெலுங்கானா 4,484 (2,278), அசாம் 3,498 (1,537), ஒடிசா 3,498 (2,474), பஞ்சாப் 2,986 (2,282), கேரளா 2,322 (1,000), உத்தரகாண்ட் 1,724 (947), ஜார்கண்ட் 1,617 (672), சத்தீஸ்கார் 1,429 (550), திரிபுரா 961 (278), இமாசலபிரதேசம் 486 (297), கோவா 463 (69), மணிப்பூர் 385 (77), சண்டிகார் 334 (286), லடாக் 239 (62), புதுச்சேரி 157 (67), நாகாலாந்து 156 (49), மிசோரம் 104 (1), அருணாசலபிரதேசம் 67 (4), சிக்கிம் 63 (2), மேகாலயா 44 (22), அந்தமான் நிகோபர் தீவு 38 (33), தாதர்நகர் ஹவேலி 30 (2).

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்த தகவல்கள் வெளியாகி இருக் கிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page