தேர்தலில் தோல்வியடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறுவேன் – டிரம்ப் உறுதி

Spread the love

தேர்தலில் தோல்வியடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறுவேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதி கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சிசெய்வார்” எனக் கூறினார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த டிரம்ப், “வரும் தேர்தலில் ஒருவேளை நான் தோல்வியடைந்தால். அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிடுவேன். வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவேன். நான் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன” எனக் கூறினார்.

அதேசமயம் ஜனாதிபதி தேர்தலில் தான் தோற்றால் அது அமெரிக்காவுக்கு மிகவும் கேடு தரக்கூடிய விஷயமாக அமையும் என்றும் அவர் கூறினார். மேலும் வரும் தேர்தலில் இமெயில் மூலம் வரும் வாக்குகளைப் பெற ஜனநாயக கட்சியினர் மோசடி செய்வார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page