
பதிவு: ஜூன் 16, 2020
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் லடாக்கில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து நாடார் மகன் ராணுவ வீரர் திரு.பழனி அவர்கள் இந்திய ராணுவத்தில் கடந்த 22 வருடங்களாக ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இன்று சீன ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்தார்.
பழனிக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பழனி உயிரிழந்த தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.