லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,
லடாக் எல்லையில் சீனா ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களும் பதிலடி தாக்குதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்தியா சீனா இடையிலான மோதல் குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த மோதலை இரு நாடுகளும் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில் “ இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகுந்த கவனத்துடன் உற்று நோக்கி வருகிறோம். இரு நாட்டு வீரர்களின் மோதல் மிகவும் ஆபத்தானது என்று நாங்கள் கருதுகிறோம்.
ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை தடுக்கவும், எல்லையில் ஸ்திரத்தன்மை இருப்பதை உறுதி செய்யவும் இரு நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வல்லவை என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த பிரச்சினையை இரு நாடுகளும் தாங்களாவே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்“ எனக் கூறினார்.