முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த முறை இருந்ததை விட இந்த ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாளை முதல் 30-ந் தேதி வரை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சிக் கடைகளை 30-ந் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.