ஒரே நாளில் 2,396 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 56 ஆயிரத்து 845 ஆக அதிகரிப்பு

Spread the love

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 103 குழந்தைகள் உள்பட 2,396 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்று எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்து உள்ளது. கர்ப்பிணி பெண் உள்பட 38 பேர் பலியாகினர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் 1,499 ஆண்கள், 897 பெண்கள் என 2 ஆயிரத்து 396 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 49 பேரும் அடங்குவர். 103 குழந்தைகளும், 315 முதியவர்களும் இந்த பாதிப்பு பட்டியலில் உள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 56 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 ஆயிரத்து 19 ஆண்களும், 21 ஆயிரத்து 806 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 20 பேரும் இடம் பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நேற்று 1,045 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 31 ஆயிரத்து 316 பேர் குணம் அடைந்து உள்ளனர். 24 ஆயிரத்து 822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் 24 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் என நேற்று 38 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதில் மதுரையை சேர்ந்த 45 வயது கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். சென்னையில் 30 பேர், திருவள்ளூரில் 26 வயது வாலிபர் உட்பட செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழப்பு பட்டியலில் உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரையில் 704 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 559 உயிர்கள் பறிபோய் உள்ளது.

103 குழந்தைகள்

புதிதாக கொரோனா பாதிப்பில் சிக்கியவர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த 1,254 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 180 பேரும், திருவள்ளூரில் 131 பேரும், திருவண்ணாமலையில் 130 பேரும், மதுரையில் 90 பேரும், காஞ்சீபுரத்தில் 87 பேரும், ராணிப்பேட்டையில் 68 பேரும், ராமநாதபுரத்தில் 49 பேரும், சேலத்தில் 47 பேரும், தூத்துக்குடியில் 46 பேரும், வேலூரில் 36 பேரும், சிவகங்கையில் 32 பேரும், நெல்லையில் 28 பேரும், விழுப்புரம், திருச்சியில் தலா 23 பேரும், கடலூரில் 16 பேரும், கன்னியாகுமரியில் 15 பேரும், கோவை, திருப்பத்தூரில் தலா 11 பேரும், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் தலா 10 பேரும், தேனி, தென்காசியில் தலா 8 பேரும், அரியலூரில் 7 பேரும், கிருஷ்ணகிரி, திண்டுக்கலில் தலா 6 பேரும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினத்தில் தலா 4 பேரும், பெரம்பலூரில் 3 பேரும், திருவாரூர், தர்மபுரியில் தலா 2 பேரும், கரூர், திருப்பூரில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

32 ஆயிரத்து 186 பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் இதுவரையில் 12 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 804 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 6 ஆயிரத்து 764 முதியவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 257 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 135 பேரும், ரெயில் மூலம் வந்த 400 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,696 பேரும், கப்பல் மூலம் துறைமுகம் வந்த 7 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 495 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 186 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page