சர்வதேச சட்ட நெறிமுறைகளை மதிக்க வேண்டும் என்று ரிக் கூட்டத்தில் இந்தியா கூறியது.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் கடந்த 15ந் தேதி இந்தியா மற்றும் சீனா வீரர்கள் இடையே நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நீடித்து விடுகிறது.இது தொடர்பாக இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ரிக் நாடுகளின் (ரஷியா, இந்தியா, சீனா) வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலிகாட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணியில் ஒருங்கிணைந்த செயல்பாடு, மூன்று நாடுகளும் பொதுவாக சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் உலக நிலவரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், உலகின் முன்னணி குரல்கள் ஒவ்வொரு வகையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சர்வதேச சட்டத்தை மதித்தல், கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீகரித்தல், பலதரப்பு வாதத்தை ஆதரித்தல் மற்றும் பொதுவான நன்மைகளை ஊக்குவித்தல் ஆகியவையே நீடித்த உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான ஒரே வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.ஜெய்சங்கர் தனது உரையின் போது எந்த ஒரு நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவரது கருத்துக்கள் இந்தியா உடனான தனது எல்லையில் ஆக்கிரமிப்பு தோரணையை பின்பற்றிவரும் சீனாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக செய்தியாக பார்க்கப்படுகிறது.