தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் திறக்க மத்திய அரசு திட்டம் -வெளியுறவுத்துறை மந்திரி தகவல்

Spread the love

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல் போன்ற பணிகளில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு நாடு முழுவதும் பல இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த சேவை மையத்தை நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் வாரியாக தபால் நிலையங்களிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது:

பாஸ்போர்ட் சேவைகளை நாட்டு மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதற்காக தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க உத்தேசித்துள்ளோம். இதுவரை 488 மக்களவைத் தொகுதிகளில் இந்த சேவை தயாரானது. முக்கிய லட்சியத்துடன் முன்னோக்கி சென்று கொண்டிருந்த இந்த செயல்முறை, கோரோனா நோய் பரவல் காரணமாக இடையில் கொஞ்சம் நிறுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது 93 சேவை மையங்கள் உள்பட 517 பாஸ்போர்ட் மையங்கள் உள்ளன . இந்த நிலையில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்கும் திட்டத்தையும் தற்போது தொடர்கிறோம்.

மேலும் சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டுகளையும் அரசு தயாரித்து வருகிறது நாசிக்கில் உள்ள அச்சகம் மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது ஒரு முக்கியமான தேவையாகும் பயண ஆவணத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

பாஸ்போர்ட் விவகாரத்தில் ஒரு வலுவான குறைதீர்க்கும் எந்திர முறையும் பின்பற்றப்படுகிறது. இது சமூக ஊடகங்களை குடிமக்களுடன் இணைக்க பயன்படுவதோடு எங்கள் சேவைகளை மென்மேலும் மேம்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page