மதிப்பெண்ணுக்கு பதிலாக எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி- கல்வித்துறை தீவிர ஆலோசனை

Spread the love

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது.

மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என மதிப்பெண் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பணிகளில் கல்வித்துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசு கேட்கும் விடைத்தாள்கள் இல்லாதது, இந்த 2 தேர்வுகளிலும் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றது உள்பட பல்வேறு கருத்துகள் அதில் மேலோங்கி இருக்கிறது. இதன் காரணத்தால் மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கிறது.

இதனை கருத்தில்கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக ஏ, பி, சி என்ற ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து அடுத்தக்கட்டமாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த கிரேடு முறைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் ஆலோசனையை முடித்து ஒரு தீர்வுக்கு வந்த பிறகு, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர், முதல்-அமைச்சருடன், அமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு கிரேடு முறையிலான தேர்ச்சியை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page