மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இருந்து செய்தியாளர்களுடனான சந்திப்பில் இன்று பேசும்பொழுது, தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பாதிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.