இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

Spread the love

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.


புதுடெல்லி,

உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி வைரசின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுகிறது. இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், புதிதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 17 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் இந்த மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 866 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் புதிதாக 407 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது. இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் நீரிழிவு மற்றும் இருதய நோய் உள்ளிட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் நாட்டில் பலியானவர்களில் 6 ஆயிரத்து 931 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேசிய தலைநகரான டெல்லியில் இந்த வைரஸ் 2,429 பேரின் உயிரை பறித்துள்ளது. 1,753 பேரை இழந்துள்ள குஜராத் 3-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 957 பேரும், உத்தரபிரதேசத்தில் 611 பேரும், மேற்குவங்காளத்தில் 606 பேரும், மத்தியபிரதேசத்தில் 542 பேரும், ராஜஸ்தானில் 379 பேரும், தெலுங்கானாவில் 230 பேரும், அரியானாவில் 198 பேரும், கர்நாடகாவில் 170 பேரும், ஆந்திராவில் 136 பேரும், பஞ்சாபில் 120 பேரும், ஜம்மு காஷ்மீரில் 90 பேரும், பீகாரில் 57 பேரும், உத்தரகாண்டில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும், ஒடிசாவில் 17 பேரும், சத்தீஸ்கார் மற்றும் ஜார்கண்டில் தலா 12 பேரும், அசாம், இமாசலபிரதேசம் மற்றும் புதுச்சேரியில் தலா 9 பேரும், சண்டிகாரில் 6 பேரும், கோவாவில் 2 பேரும், திரிபுரா, லடாக், அருணாசலபிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியமே பாதிப்பிலும் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு மட்டும் இந்த வைரசால் 1 லட்சத்து 47 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக இருக்கிறது. டெல்லியில் சுமார் 74 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். குஜராத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ராஜஸ்தானில் 16,296, மேற்குவங்காளத்தில் 15,648, மத்தியபிரதேசத்தில் 12,596, அரியானாவில் 12,463, தெலுங்கானாவில் 11,364, ஆந்திராவில் 10,884, கர்நாடகாவில் 10,590 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 637 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1 லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page