முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 49,690 ஆக உள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு
செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகக் கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி என்றும் கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அலோபதி மருத்துவமும், 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.