அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா தொற்று உறுதி

Spread the love

அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணம் வூஹானில் பரவத்தொடங்கிய கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் 216க்கும் மேற்பட்ட நாடுகளில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு சுமார் 336,673 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மனித சமூகத்தை மிரட்டி வரும் கரோனா தற்போது விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் உயிரியல் பூங்காவில் 4 வயது நாடியா என்ற மலையான் புலிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் கரோனா அறிகுறி உள்ளதாகவும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயிரியல் பூங்கா ஊழியர்களிடமிருந்து விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விலங்குகளுக்கு கரோனா பாதிப்பு இருக்குமா என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது புலிக்கு கரோனா தொற்று உண்டாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page