சென்னையில் இடி-மின்னலுடன் மழை; மக்கள் மகிழ்ச்சி

Spread the love

சென்னையில் இடி-மின்னலுடன் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் வடமாவட்டங்களில் மட்டும் மழை குறைவாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில், கோடைகாலம் தொடங்கிய பிறகு வெயில் வாட்டி வதைத்தது. வெயிலுக்கு இதமாக எப்போதாவது சற்று மழை பெய்துவிடாதா? என சென்னைவாசிகள் ஏங்கித்தவித்தனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில், கடந்த 21-ந்தேதி இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

அதன்பின்னர், ஒவ்வொரு நாளும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில இடங்களில் லேசான மழை அவ்வப்போது இருந்தது. நேற்று முன்தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது.

சென்னையில் நேற்று காலையில் இருந்து மேகங்கள் சூழ்ந்தபடி, ரம்மியமாக காட்சியளித்தது. நேற்று பிற்பகலில் இருந்து சென்னையில் பரவலாக மழை பெய்தது. சென்னை கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், திருவான்மியூர் உள்பட பல இடங்களில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. சில இடங்களில் காற்றுடன் கனமழையும், சில இடங்களில் லேசான மழையுமாக இருந்தது.

இந்த மழை வெகுநேரம் வரை நீடிக்கவில்லை என்றாலும், வெப்பத்தை தணிக்கும் வகையிலும், எந்தவித தளர்வும் இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி இருந்த சென்னை மக்கள் சற்று இளைப்பாறும் வகையிலும் இருந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலர் தங்களுடைய வீட்டு மாடியில் மழையில் நனைந்தபடி ரசித்தனர். ஊரடங்குக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த மழை இருந்ததாக சென்னைவாசிகள் பலரும் தெரிவித்தனர். சென்னை மட்டுமல்லாது, புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் உள்பட சில இடங்களில் லேசான மழையும் இருந்தது.

கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் காணப்பட்டு வந்த சென்னை உள்பட வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை) மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page