இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியது

Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5½ லட்சத்தை நெருங்கி உள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தபோது, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

தொடர் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளால் கொரோனாவின் வேகத்துக்கு கடிவாளம் போட முடியவில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இப்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான 29 நாட்களில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 783 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 19 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிதாக 380 பேரின் உயிரையும் இந்த ஆட்கொல்லி வைரஸ் பறித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 10 ஆயிரத்து 120 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மராட்டியம், டெல்லி, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை இந்த கொரோனா வைரஸ் பறித்துள்ளது. அதில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 7,429 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 2,623 ஆக உள்ளது. குஜராத்தில் 1,808 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் 1,141 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் 660 பேரும், மேற்குவங்காளத்தில் 639 பேரும், மத்தியபிரதேசத்தில் 557 பேரும், ராஜஸ்தானில் 399 பேரும், தெலுங்கானாவில் 247 பேரும், அரியானாவில் 223 பேரும், கர்நாடகாவில் 207 பேரும், ஆந்திராவில் 169 பேரும், பஞ்சாபில் 133 பேரும் கொரோனாவின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது.

அதிக உயிரிழப்பை சந்தித்த மராட்டிய மாநிலமே பாதிப்பிலும் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 1 லட்சத்து 64 ஆயிரத்து 626 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் 86 ஆயிரத்து 224 பேரும், டெல்லியில் 83 ஆயிரத்து 77 பேரும், உத்தரபிரதேசத்தில் 22 ஆயிரத்து 147 பேரும், மேற்குவங்காளத்தில் 17 ஆயிரத்து 283 பேரும், ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 271, தெலுங்கானாவில் 14 ஆயிரத்து 419 பேரும், அரியானாவில் 13 ஆயிரத்து 829 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் புதிதாக 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 241 ஆக அதிகரித்து உள்ளது. ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 1,267 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 13 ஆயிரத்து 241 ஆக உயர்ந்து இருக்கிறது. கேரளாவில் 4,189 பேருக்கும், புதுச்சேரியில் 619 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page