எல்லை பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் 5-ந் தேதி லடாக் செல்கிறார்

Spread the love

எல்லை பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வருகிற 5-ந் தேதி லடாக் செல்கிறார்.


புதுடெல்லி,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க அரசு மட்டத்திலும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

என்றாலும் இரு தரப்பிலும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சீன ராணுவம் படைகளை குவித்து இருப்பதால், இந்தியாவும் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிவைத்து இருக்கிறது.

இந்த நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) லடாக் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் ராணுவ தளபதி நரவானேயும் செல்கிறார்.

இந்த பயணத்தின் போது இந்திய தரப்பில் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்யும் ராஜ்நாத் சிங், அங்கு உயர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக டெல்லியில் நேற்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பயணத்தின் போது, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயம் அடைந்து லே பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீரர்களை பார்த்து ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறுகிறார்.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு ராஜ்நாத் சிங் அங்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும்.

இதற்கிடையே இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளுக்கு இடையே கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி நேற்று முன்தினம் மீண்டும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

லடாக் எல்லையில் இந்திய பகுதியில் உள்ள சுசுல் செக்டார் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் சின்ஜியாங் பிராந்திய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியூ லின்னும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ராணுவ தளபதிகள் பங்கேற்ற இரு பேச்சுவார்த்தைகள் சீன பகுதியில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நடந்த நிலையில், மூன்றாவது பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இந்திய பகுதிக்குள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 12 மணி நேரம் நீடித்தது.

அப்போது, எல்லைப் பகுதியில் இருந்து படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், படைவிலக்கலின் அவசியம் பற்றி இரு தரப்பிலும் வற்புறுத்தப்பட்டதாகவும் டெல்லியில் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. படை விலக்கல் நடவடிக்கையை துரிதப்படுத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் எல்லையில் அமைதியை நிலைநாட்ட ராணுவ மட்டத்தலும், தூதரக மட்டத்திலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page