அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை நோக்கி செல்கிறது: “கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம்” – டிரம்ப்

Spread the love

கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையில் மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கக்கேடானது என்று டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் வேக, வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தும் கூட கொரோனா வைரஸ் “விட்டேனா, பார்” என்று சொல்கிற வகையில் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் புள்ளி விவரப்படி அமெரிக்காவில், அந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று மதிய நிலவரப்படி 3 லட்சத்து 38 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அந்த வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நோக்கி வேகமாக செல்கிறது. இதைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் உறைந்து போய் இருக்கிறார்கள்.

ஏனென்றால் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், அந்த நாட்டை விட, அதைப் பின்தொடர்ந்து வேகமாக தாக்குதலை சந்தித்த ஸ்பெயின், இத்தாலி நாடுகளை கடந்து, உலகிலேயே அதிகம் பாதிப்புக் குள்ளானவர்களை கொண்ட நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற வைத்துள்ளது.

அது மட்டுமின்றி உயிர்ப்பலியிலும், இத்தாலி (15,880), ஸ்பெயின் (12,400) நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தப்படக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளது. இந்த மருந்து, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவக்கூடியதாகும். எரித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக்காக இது வேலை செய்வதுடன், பாக்டீரியா தொற்றுக்கு எதிராகவும் பயன்படும்.

இந்த மருந்து வேலை செய்தால், அதை நாம் ஆரம்பத்திலேயே செய்யாதது வெட்கக்கேடானது. மீண்டும் நீங்கள் மருத்துவ வழியாக செல்ல வேண்டும். ஒப்புதலைப்பெற வேண்டும். மருத்துவ வல்லுனர்கள் இதன் பக்க விளைவுகளை அறிவார்கள். அதே நேரத்தில் அதன் செயல்படும் திறனையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த மருந்து வேலை செய்யும் என்று நம்புவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page