கோவை நீதிபதிக்கு கொரோனா 4 கோர்ட்டுகள் மூடப்பட்டன

Spread the love

கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 4 கோர்ட்டுகள் மூடப்பட்டன.

கோவை,

கோவையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்க உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கொடிசியாவில் உள்ள சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் 45 வயதான நீதிபதி ஒருவர் கொரோனா அறிகுறியுடன் இருந்தார். இதனால் அவருடைய சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மற்றொரு பெண் நீதிபதி, மாஜிஸ்திரேட்டு ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் அவர்கள் 2 பேரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் உள்ள 2 விரைவு நீதிமன்றங்கள், 2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் ஆகியவை மூடப்பட்டன.

கோர்ட்டு வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கோர்ட்டுகளிலும் நேற்று விசாரணைகள் நடைபெறவில்லை.

கோர்ட்டில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கோர்ட்டில் உள்ள மற்ற நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கோர்ட்டுகளில் நேரடியாக வக்கீல்கள் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், விரைவு கோர்ட்டு நீதிபதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், மற்ற கோர்ட்டுகளிலும் ஆன்லைன் மூலமே விசாரணை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page