சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு: அமெரிக்கர்களுக்கு விசா தடை விதித்து சீனா பதிலடி

Spread the love

திபெத் விவகாரம் தொடர்பாக, சீன அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது. சீனா இதற்கு பதிலடியாக, அமெரிக்கர்களுக்கு விசா தடை விதித்துள்ளது.


வாஷிங்டன்,

திபெத் பகுதிக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பும், அதிகாரமும் தொடர்வதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க மக்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் யாரையும் திபெத்துக்குள் நுழைய சீனா அனுமதிப்பதில்லை. அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிகாரிகள் திபெத் செல்ல முயன்றாலும் அதற்கும் சீனா அனுமதி மறுத்து வருகிறது

இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு திபெத் அணுகல் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த சட்டப்படி திபெத்துக்குள் அமெரிக்க மக்களை அனுமதிக்க மறுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கும் விசா வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை கொண்டுவரும்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இதுவரை அமெரிக்கா அதை தீவிரமாகச் செயல்படுத்தாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் திபெத் அணுகல் சட்டத்தின் கீழ் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகள் பலருக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதனிடையே அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதை காரணம் காட்டி அமெரிக்க மக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொருளாதார தடைகள் என்கிற பெயரில் ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்கான சீனாவின் சட்டத்தை தடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் அது ஒருபோதும் வெற்றி பெறாது. ஹாங்காங் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க மக்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page