சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 2 வழக்குகள் உடனடியாக பதிவு

Spread the love

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை உடனடியாக தொடங்கியது. சி.பி.ஐ. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.


சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்ற காவலில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலைவழக்குப்பதிவு செய்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். நேற்று 2-வது கட்டமாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக மத்திய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு சூப்பிரண்டு தன்மயா பெரா தலைமையில் சி.பி.ஐ. போலீசார் விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள். ஏற்கனவே வியாபாரி ஜெயராஜ் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மரணம் அடைந்தது தொடர்பாகவும், அவரது மகன் பென்னிக்ஸ் அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்ததையொட்டியும் 2 வழக்குகளை தனித்தனியாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்திருந்தனர்.

இந்த 2 வழக்குகளும் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த 2 வழக்குகளையும் சி.பி.ஐ. போலீசார் தங்களது பாணியில் தனித்தனியாக பதிவு செய்தனர். குற்றவியல் நடைமுறை சட்டம் 176(1)(ஏ)(1) (மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு) என்ற பிரிவின் கீழ் சி.பி.ஐ. வழக்கை பதிவு செய்து உள்ளது.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் தான் முதலில் மேற்கண்ட 2 வழக்குகளையும் பதிவு செய்திருந்தார்.

வியாபாரி ஜெயராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பதிவு செய்திருந்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

ஜூன் மாதம் 23-ந்தேதி காலை 6.45 மணிக்கு நான் பணியில் இருந்தேன். அப்போது கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டு மு.சங்கர் போலீஸ்நிலையத்தில் வந்து ஆஜராகி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

ஜூன் 20-ந்தேதி அன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஜெயராஜ் என்பவர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜூன் 22-ந்தேதி அன்று இரவு 10.20 மணிக்கு தனக்கு காய்ச்சல் இருப்பதாக சிறைக்காவலரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறையின் முதன்மை தலைமை காவலர் அழகர்சாமி, 2-ம் நிலை காவலர் செந்தூர்ராஜா ஆகியோர் இரவு 10.30 மணிக்கு ஜெயராஜை மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 23-ந்தேதி அன்று அதிகாலை 5.40 மணிக்கு ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சூப்பிரண்டு சங்கர் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்டவாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் அடுத்தகட்டமாக சாத்தான்குளத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ. சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா இந்த வழக்கு விசாரணையை முன்னின்று நடத்துவார் என்று சி.பி.ஐ. தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page