நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை,
மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது. அந்த அடிப்படையில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து 11வதாக புதிய மருத்துவக் கல்லூரி நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ளது. மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதம் மற்றும் தமிழக அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டிட பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் பழனிச்சாமி நாளை நாட்டி வைக்கவுள்ளார்.
உதகையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி உடனான மருத்துவமனை அமைய உள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கவுள்ளன.