தமிழகம், மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு உயர்வு; கர்நாடக முதல் மந்திரி பேட்டி

Spread the love

தமிழகம் மற்றும் மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது என முதல் மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உள்ளன. தொடர்ந்து தமிழகம், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் தலா 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 3,648 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 72 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,403 ஆக உயர்ந்தது. 23,795 பேர் குணமடைந்து உள்ளனர். 42,222 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகாவின் பெங்களூருவில் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. நேற்று ஒரு நாளில் 1,452 பேர் பாதிக்கப்பட்டும், 31 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என கர்நாடக சுகாதார துறை தெரிவித்தது.

இந்த நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவில் நாளையில் இருந்து ஊரடங்கு இல்லை. மக்கள் பணிக்கு திரும்ப வேண்டிய தேவை உள்ளது. பொருளாதாரமும் மிக முக்கியம் வாய்ந்தது. நிலையான பொருளாதாரம் தொடருவதுடன், கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டியது உள்ளது.

இதற்கு ஊரடங்கு தீர்வாக இருக்காது. அதனால், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

இதன்பின் அவர், தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வந்தவர்களால் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. நிபுணர்கள் 5 முக்கிய திட்டங்களை ஆலோசனையாக வழங்கி உள்ளனர்.

இதன்படி, கொரோனா நோயாளியை அடையாளம் காணுதல், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அறிதல், பரிசோதனை செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய திட்டங்கள் நோயாளிகளிடம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page