பிரபல வக்கீலும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டர் தளத்தில் விமர்சித்து இருந்தார்.

புதுடெல்லி,
பிரபல வக்கீலும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டர் தளத்தில் விமர்சித்து இருந்தார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் வழக்கை நீதிபதிகள் கையாண்ட விதம் குறித்தும், பீமா கொரேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சமூக ஆர்வலர்களுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்பான வழக்கை விசாரித்த விதம் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்டது. அதன்படி வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டுவிட்டர் நிறுவனம் மீதும் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரிக்கப்படுகிறது.