ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

Spread the love

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில், தலைநகர் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முககவசங்கள் வழங்க பரிசீலிக்கப்படுவதாக கூறினார்.

தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் உள்ள குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் வருகின்றனர். இதில், ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசங்கள் என்று கணக்கிட்டால், மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங்கப்படவேண்டும்.

எனவே, இந்த முககவசங்களை எவ்வளவு விலையில் கொள்முதல் செய்வது என்பதை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் இடம்பெற்றிருந்தனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதாவது, முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page