தமிழகத்தில் புதிதாக 6,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பச்சிளம் குழந்தை, 15 வயது சிறுமி உள்பட 85 பேர் பலியாகினர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 62 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,215 ஆண்கள், 2,771 பெண்கள் என 6,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,155 பேரும், செங்கல்பட்டில் 501 பேரும், திருவள்ளூரில் 480 பேரும், குறைந்தபட்சமாக கரூரில் 12 பேரும், நாமக்கலில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 62 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 768 ஆண்களும், 83 ஆயிரத்து 932 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 23 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 10 ஆயிரத்து 691 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 26 ஆயிரத்து 477 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 49 பேரும், தனியார் மருத்துவமனையில் 36 பேரும் என 85 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் திருவண்ணாமலையை சேர்ந்த பச்சிளம் ஆண் குழந்தையும் அடங்கும். குறைவான எடையில் பிறந்து 37 நாளே ஆன இந்த குழந்தைக்கு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது. தஞ்சாவூரை சேர்ந்த 15 வயது சிறுமியும் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
நேற்றைய உயிரிழப்பு பட்டியலில் சென்னையில் 26 பேரும், மதுரையில் 8 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகரில் தலா 5 பேரும், வேலூர், நெல்லையில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், ராமநாதபுரம், தென்காசி, தேனியில் தலா இருவரும், திருச்சி, தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், கோவையில் தலா ஒருவரும் இடம் பெற்றனர். இதுவரையில் 3,494 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 471 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,315 பேரும், திருவண்ணாமலையில் 681 பேரும், திருவள்ளூரில் 524 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 703 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் மேலும் புதிதாக ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதனால் 58 அரசு நிறுவனம், 58 தனியார் நிறுவனம் என மொத்தம் 116 நிறுவனங்களில் பரிசோதனைகள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.