பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா?

Spread the love

பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காஷ்மீர் விவகாரம் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.


புதுடெல்லி,

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து வந்தன.

இந்தநிலையில் கடன் தொகையை திருப்பி செலுத்தாததை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கான எண்ணெய் வினியோகத்தை சவுதி அரேபியா அண்மையில் நிறுத்தியது.

இதன் மூலம் பாகிஸ்தானுடனான பல ஆண்டு கால உறவை சவுதி அரேபியா முறித்து கொண்டிருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் விவகாரமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்ப பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 57 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் சவுதி அரேபியா பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று கூட்டத்தை கூட்ட மறுத்தது. காஷ்மீர் விவகாரத்தில் சவுதி தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என எண்ணிய பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவு துறை மந்திரி மெக்மூத் குரேஷி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சவுதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியா எங்களுக்கு ஆதரவாக இல்லை என்றால், இந்த விவகாரத்தில் எங்களுக்கு தோள் கொடுக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒரு கூட்டத்தை பாகிஸ்தான் கூட்டும் என அவர் கூறினார்.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியின் இந்தப் பேச்சு சவுதி அரேபியாவை மிரட்டும் தொனியில் இருப்பதால் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page