சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
தொழிற்சாலைகள், திட்டங்கள் தொடங்க ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகளை திருத்தி, புதிய வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரைவு அறிவிக்கையை வாபஸ் பெறுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ஒரு கட்டுரையில் எழுதி இருப்பதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே, உடனே இந்த வரைவு அறிவிக்கையை திரும்பப்பெற வேண்டும்.
சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை ஒழித்துக்கட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், உலக வெப்பமயமாதல் மற்றும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை முன்னிறுத்துவதற்கு பொதுமக்களுடன் கலந்தாலோசித்து செயல்திட்டம் வகுப்பதுதான்.
கொரோனாவின் தோற்றமும், பரவலும், அதன் பேரழிவும் உலகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொது சுகாதார மேம்பாடும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.
உயரிய பல்லுயிர் பெருக்கமும், பரவலான ஏற்றத்தாழ்வும் கொண்ட இந்தியா, இப்போதாவது இதை கேட்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியை தேடும் வேகத்தில், நமது நாடு சுற்றுச்சூழலை அடிக்கடி தியாகம் செய்கிறது. முன்னேற்றம் தேவைதான். ஆனால், அத்துமீறாத வகையில் அதற்கு எல்லை இருக்க வேண்டும். இந்த அரசு கடந்த 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை அழித்து விட்டது.
கொரோனா தாக்கத்தால், இந்த விஷயத்தை அரசு மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் ஆலோசிக்காமல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. நிலக்கரி ஏலம் பற்றிய பிரதமரின் அறிவிப்பு, இதற்கு ஒரு உதாரணம்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை, சுற்றுச்சூழலை கெடுப்பவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்து, சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்தியாவை பசுமை உற்பத்தி கூடமாக மாற்ற வாய்ப்பு வந்துள்ளது. அதற்கு இந்த வரைவு அறிவிக்கையை வாபஸ்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்த கட்டுரையை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இயற்கையை நாம் பாதுகாக்கும்போதுதான், இயற்கை நம்மை பாதுகாக்கும். எனவே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை உடனே வாபஸ்பெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.