பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Spread the love

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கோமா நிலைக்கு சென்றுவிட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும், அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்தநிலையில், நேற்று முன்தினம் காலையில் அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார். எனினும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியது.

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில்தான் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மதிப்புக்குரிய பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இன்று (ஆகஸ்டு 14-ந்தேதி) காலையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் தற்போதும் நிலையாக உள்ளன’ என்று குறிப்பிட்டு இருந்தது.

இதற்கிடையே தனது தந்தையின் உடல்நிலை மோசமடையவில்லை என பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘மருத்துவ வாசகங்களில் இறங்காமல், கடந்த 2 நாட்களாக என் அப்பாவின் உடல்நிலை குறித்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்னவென்றால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் மோசமடையவில்லை. அவரது கண்கள் ஒளிக்கு எதிர்வினையாற்றுவதில் சிறிய முன்னேற்றம் உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page