இந்தியாவில் கொரோனா பலி 50 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.47 லட்சமாக உயர்வு

Spread the love

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 26.47 லட்சமாக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

மனித குலத்தை தனது கொடூர கரங்களால் நசுக்கி வரும் கொரோனா வைரஸ், நாளும் ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கி வருகிறது. ஏழை-பணக்காரன், படித்தவன்- படிக்காதவன் என எந்தவித வேறுபாடும் இன்றி வெறியாட்டம் போட்டு வரும் இந்த தொற்றுக்கு வல்லரசு நாடுகளும் தப்பவில்லை.

 

அதைப்போலவே 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருக்கும் இந்தியாவும் ஆட்கொல்லி கொரோனாவிடம் சிக்கி தவித்து வருகிறது. இங்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த கொடூர தொற்றால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 941 பேர் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்து விட்டனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 288 பேர், தமிழகத்தில் 125, கர்நாடகாவில் 116, ஆந்திராவில் 88, உத்தரபிரதேசத்தில் 56, மேற்கு வங்காளத்தில் 51, பஞ்சாபில் 41 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக உயர்ந்து விட்டது.

சுமார் 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மத்திய-மாநில அரசுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளில், 20,037 பேரை இழந்த மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை தமிழகம் (5,766), டெல்லி (4,196), கர்நாடகா (3,947), குஜராத் (2,785), ஆந்திரா (2,640), உத்தரபிரதேசம் (2,449), மேற்கு வங்காளம் (2,428), மத்திய பிரதேசம் (1,105) ஆகிய மாநிலங்கள் பிடித்து உள்ளன.

இதைப்போல ராஜஸ்தான் (876), பஞ்சாப் (812), தெலுங்கானா (703), காஷ்மீர் (542), அரியானா (538), பீகார் (461), ஒடிசா (343), ஜார்கண்ட் (244), அசாம் (189), கேரளா (156), உத்தரகாண்ட் (152) ஆகிய மாநிலங்களும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பலியை கொண்டிருக்கின்றன.

கொரோனா உயிரிழப்புகள் இவ்வாறு இருந்தாலும், இந்தியாவின் இறப்பு விகிதம் 1.92 சதவீதம்தான். இது பிற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். அதேநேரம் தொற்றில் இருந்து மீள்வோர் விகிதமோ 72.51 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போதைய நிலையில் 6,76,900 பேர் மட்டுமே பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் 19,19,842 பேர் கொரோனாவை வென்றிருக்கிறார்கள். இந்த மீட்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page