“ரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் பற்றி சந்தேகமாக இருக்கிறது” – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பேட்டி

Spread the love

ரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் குறித்து சந்தேகமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கவலை தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்,

கடந்த 1996-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி. இவர், சாதாரண செல்களில் இருந்து வைரஸ் பாதித்த செல்களை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் எப்படி வேறுபடுத்தி பார்ப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். தற்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றி வருகிறார்.

 

கொரோனாவுக்கு எதிராக ரஷியா கண்டுபிடித்துள்ள ‘ஸ்பட்னிக்‘ தடுப்பூசி குறித்து விஞ்ஞானிகள் பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டியும் அதே சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

மெல்போர்னில் இருந்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஸ்பட்னிக் தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன்எப்படி இருக்குமோ என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது. அதை விட இந்த சந்தேகம் உண்மையாகி விட்டால், அதன்பிறகு மற்ற தடுப்பூசிகள் பற்றியும் சந்தேகம் எழுந்து நிராகரிக்க தோன்றும் என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் தடுப்பூசிக்கு பதிலாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது நல்லதா என்று கேட்கிறீர்கள். ஆனால், தடுப்பூசி விலை மலிவானது. விரைவாக குணப்படுத்தக்கூடியது. இருப்பினும், இது பலன் அளிக்காவிட்டால், வைரஸ் தடுப்பு மருந்துகள் தேவைப்படும்.

ரஷிய தடுப்பூசியை ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கு கொடுப்பதுடன், ஏழை நாடுகளுக்கு வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மலிவு விலை மருந்துகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரிய சாதனை படைத்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில்இந்தியா முக்கிய பங்கு வகிக்கலாம். சர்வதேச பொருளாதாரம் விரைவாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கு இதுவே வழி. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page