‘பி.எம்.கேர்ஸ்’ பற்றிய உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பலத்த அடி என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,
‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது ‘டுவிட்டர்’ பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
ராகுல்காந்தி குடும்பம், பல பத்தாண்டுகளாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியை தங்கள் குடும்ப சொத்தாகவே கருதியது. அதில் உள்ள நிதியை அப்பட்டமாக தங்கள் குடும்ப அறக்கட்டளைகளுக்கு மாற்றியது.
அதே எண்ணத்தில், ‘பி.எம்.கேர்ஸ்’ பற்றி ராகுல்காந்தியும், அவருடைய அடிப்பொடிகளும் அவதூறு பிரசாரம் செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, அவர்களது அவதூறு பிரசாரத்துக்கு பலத்த அடி கொடுத்துள்ளது.
அவர்களது தீய உள்நோக்கம் மற்றும் தீய முயற்சிகளையும் மீறி உண்மை ஒளிர்வதை அந்த உத்தரவு காட்டுகிறது. இதற்கு பிறகாவது ராகுல்காந்தி கோஷ்டி தங்கள் வழிமுறையை மாற்றிக் கொள்வார்களா? அல்லது மீண்டும் தர்மசங்கடத்துக்கு ஆளாவார்களா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.