ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் சிறுபான்மையின மாணவர்கள் 145 பேர் வெற்றி பெற்றது குறித்து மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் சிறுபான்மையின மாணவர்கள் 145 பேர் தேர்வு பெற்றுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சிறுபான்மையின இளைஞர்களின் திறமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உகந்த நேர்மறையான சூழலை மோடி அரசு வழங்கி இருக்கிறது. இந்த உள்ளடக்கிய அதிகாரமளித்தலின் நேர்மறை சூழலானது, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்த மிகப்பெரிய ஆட்சிப்பணிகளில் தேர்வாவதை உறுதி செய்கிறது’ என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘இந்த ஆண்டு கூட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 145 பேர் இந்த புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் 22 பேர் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் ‘நை உதான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பயிற்சி மூலம் இந்த சாதனையை எட்டியிருக்கின்றனர்’ என்றும் தெரிவித்தார்.