இளைஞர்கள் மத்தியிலும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஜெனீவா
20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோய் பரவல் மாற்றம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ரஷியா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள சூழலில், அதனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.