வேகமாக பரவும், குறைந்த அளவிலேயே கொல்லும் ஆற்றல் உடைய கொரோனா மாற்றம் பெற்று உள்ளது.

சிங்கப்பூர்
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பரவிவரும் திடீர்மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், அதிக வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே கொல்லக்கூடியது என அந்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மூத்த மருத்துவ ஆலோசகராக பணிபுரியும் பால் தம்பையா டி614ஜி என்னும் சமீபத்தில் பரவிவரும் திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக உயிர் பலிகள் அதிகம் இல்லை என்றும், அது குறைவாகவே கொல்லக்கூடியது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிகம் பரவினாலும் குறைவாகவே கொல்லக்கூடிய ஒரு வைரஸ் நல்ல விஷயம் என்றும் கூறலாம் என்கிறார் அவர்.
திடீர் மாற்றம் பெறப் பெற, பெரும்பாலான வைரஸ்கள் வீரியம் குறைந்தவையாக மாறும் என்கிறார் தம்பையா அதிகம்பேரை தொற்றவேண்டும் என்பது வைரஸின் குணமாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கொல்ல அவை விரும்புவதில்லை என்று கூறும் தம்பையா , வைரஸுக்கு வாழ இடமும் உணவும் தேவை என்கிறார்.
அதாவது, உணவுக்காகவும், உறைவிடத்துக்காகவும் மனிதனையே வைரஸ்கள் நம்பியிருப்பதால், அவை மனிதர்களை முற்றாக அழித்துவிட்டால், அவற்றிற்கே உணவும் உறைவிடமும் கிடைக்காது என்பதால், அவை மனிதனை கொல்ல விரும்புவதில்லை என்பது அவரது கூற்று.
உலக சுகாதார மையமும், வைரஸ்களில் ஏற்படும் திடீர்மாற்றம், அவற்றை அதிக வீரியமுடையவையாக மாற்றுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.