கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது

Spread the love

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியது.


சியோல்,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் முழு ஊரடங்கு, தனிமனித இடைவெளி ஆகியவையே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளாக உள்ளன.

 

இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்னும் பொது முடக்கம் தொடர்கிறது. மேலும் கொரோனா காரணமாக உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும், ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளன.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-வது அலை வீசத் தொடங்கி வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

இந்த சூழலில் இரு நாட்டு ராணுவமும் கொரிய எல்லையில் வருடாந்திர ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதமும், ஆகஸ்டு மாதமும் இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் நடக்க வேண்டிய கூட்டு ராணுவ பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் ஆகஸ்டு மாத கூட்டு ராணுவ பயிற்சியும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பயிற்சி தொடங்கி உள்ளது.

கணினி உருவகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருந்தது. ஆனால் இந்த ராணுவ பயிற்சியில் ஈடுபடும் தென்கொரிய ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று இந்த கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராணுவ தளங்களில் கொரோனா பரவாமல் இருக்க இந்த மாத இறுதி வரை ராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்வதற்கு தென்கொரிய ராணுவம் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே வடகொரியா மற்றும் தென்கொரியா இடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், இந்த கூட்டு ராணுவ பயிற்சி அங்கு பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page