இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது – ஒரே நாளில் 60 ஆயிரம் பேர் நலம்

Spread the love

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை வீழ்த்தி, குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 60 ஆயிரம் பேர் நலம் பெற்றிருக்கிறார்கள்.


புதுடெல்லி,

உலக அளவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரங்கள்படி, நேற்று மதியம் வரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சத்து 21 ஆயிரத்து 178 ஆக உள்ளது. முதல் இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 27 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 20 லட்சத்து 37 ஆயிரத்து 870 ஆக உள்ளது.

 

நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 91 பேர் கொரோனாவில் இருந்து நலம் பெற்று, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் விகிதம் என்பது 73.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்ததின் காரணமாக இறப்புவிகிதம் 1.91 சதவீதமாக சரிந்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 514 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4-ல் ஒரு பங்கை விட குறைவு (24.45 சதவீதம்) என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிக அளவில் மராட்டிய மாநிலத்தில்தான் 1 லட்சத்து 56 ஆயிரத்து 920 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா (85 ஆயிரத்து 130), கர்நாடகம் (79 ஆயிரத்து 798), தமிழகம் (53 ஆயிரத்து 860), உத்தரபிரதேசம் (50 ஆயிரத்து 242) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு, திறமையாக கையாண்டு நல்லதொரு வெற்றியை பெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீது மத்திய, மாநில அரசாங்கங்கள் கவனம் செலுத்தி, ஒத்துழைத்து, செயல்பட்ட விதம்தான், குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே சிகிச்சை பெறவும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பவும் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் தரமான சிகிச்சை அளித்து வருவதால் குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், “தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு ஒரு தரப்படுத்தப்பட்ட, முன்கூட்டியே திட்டமிட்ட, செயல் திறன் மிக்க வழிமுறையை பின்பற்றி வந்தது. இந்த மேலாண்மை உத்தி, கொரோனா இறப்புவிகிதம் 1.91 சதவீதமாக குறைய காரணமானது” என தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page