ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகிகள் தகவல்

Spread the love

ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும் என்று ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


அயோத்தி,

பல்லாண்டு கால சட்ட போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, ராமபிரான் அவதரித்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் கடந்த 5 ஆம் தேதியும் நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், ராமர் கோவில் கட்டுமானத்தில் இரும்பின் பயன்பாடு இருக்காது என்று ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து இன்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த் ஷேத்திரா அறக்கட்டளை கூறியிருப்பதாவது: – அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. கோயில் அமையவிருக்கும் பகுதியில் மண்ணின் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 36 – 40 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோயில் கட்டுமானப் பணியில் இரும்பு பயன்படுத்தப்படாது. கற்களை மட்டுமே கொண்டு கோவில் கட்டப்படும். ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கோவில் கட்டப்படும்.

இந்திய கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த கட்டமைப்பு அமையவுள்ளது. நிலநடுக்கம், சூறாவளி போன்ற எந்த இயற்கை பேரிடரையும் தாங்கும் சக்தி கொண்டதாக இந்த கட்டடம் அமையும். கற்களை இணைப்பதற்காக 10 ஆயிரம் செப்புத்தகடுகள் தேவைப்படுகின்றன. கட்டுமான பணிகளில் மக்களும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பும் பட்சத்தில் செம்பு பொருட்களை தானமாக அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page