“அமெரிக்காவை டிரம்ப் வெகுகாலம் இருளில் தள்ளிவிட்டார்” – கட்சி மாநாட்டில் ஜோ பைடன் ஆவேசம்

Spread the love

“அமெரிக்காவை டிரம்ப் வெகுகாலம் இருளில் தள்ளிவிட்டார்” என்று கட்சி மாநாட்டில் ஜோ பைடன் குற்றம் சாட்டினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் களம் இறங்குகிறார். அடுத்த வாரம் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

 

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமா காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் களம் காணுகிறார்.

ஜோ பைடனை வேட்பாளராக முறைப்படி அறிவிக்கும் கட்சி மாநாடு, டெலவாரே மாகாணத்தில் அவரது சொந்த ஊரான வில்மிங்டன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தான் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டதை ஏற்று அவர் ஆவேச உரை ஆற்றினார்.

அப்போது அவர், “ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவை நீண்ட காலம் இருளில் தள்ளி விட்டார். அவர் அதிக கோபம், அதிக பயம், அதிகப்படியான பிரிவினை ஆகியவற்றை கட்டவிழ்த்து விட்டார்” என சாடினார். “நான் இருளின் கூட்டாளி அல்ல, ஒளியின் கூட்டாளி” என தன்னைப் பற்றி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, “இங்கு இப்போது நான் உங்களுக்கு எனது வார்த்தைகள் மூலம் வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் என்னிடம் ஜனாதிபதி பதவியை ஒப்படைத்தால், நான் நம்மில் மிகச்சிறந்ததை ஈர்ப்பேன். மோசமானதை அல்ல. நமக்கான நேரம் வந்திருக்கிறது. நாம் ஒன்றுபடுவோம். எந்த தவறும் செய்யாமல், நாம் ஒன்றுபட்டு, அமெரிக்காவின் இந்த இருளான காலத்தை வெல்ல முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார். நடைபெறப்போகிற தேர்தல் வாழ்க்கையை மாற்றி அமைக்க உள்ள தேர்தல், இது நீண்ட காலம் அமெரிக்கா எப்படி இருக்கப்போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

மேடையில் ஜோ பைடன், தனது மனைவி ஜில், துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாப்புடன் உற்சாகமாக காட்சி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page