அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணையதளம் மூலம் நல உதவி பெறும் வசதியை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. கொரோனா நோய் பரவல் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்வது, புதுப்பிப்பது, கல்வி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான மனுக்களை அளிக்க மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகம் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, https://labour.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் உறுப்பினர்களாக பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிக்கான மனுக்கள் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நேற்று தலைமை செயலகத்தில் இணையதளம் மூலம் புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியினை தொடங்கிவைத்தார். தொடர்ந்து புதுப்பித்தலுக்கான சான்றிதழ்களை 6 தொழிலாளர்களுக்கும், கல்வி, திருமணம் மற்றும் விபத்து மரண திட்ட உதவிகளை 4 தொழிலாளர்களுக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் கமிஷனர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் (பொ) அ.யாஸ்மின் பேகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.