‘அரியர்’ தேர்விலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

‘அரியர்’ தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் நலன்கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் வழிகாட்டுதலின்படியும் மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

 

முதலாம், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்களுக்கும், முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், அதேபோன்று எம்.சி.ஏ. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த செமஸ்டருக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல கடந்த 23.7.2020 அன்று உத்தரவிட்டு இருந்தேன்.

அதன்அடிப்படையில், உயர்கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன்கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளுக்கும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டன. இந்த நிலையில் பிற செமஸ்டர் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்கள் என்று முதல்-அமைச்சர் கூறியது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நிருபர்கள் விளக்கம் கேட்டனர்.

அதற்கு அவர், ‘கொரோனா காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுவதற்கு தயாராக இருக்கும் அனைத்து மாணவர்களின் நலன்கருதி அவர்களுக்கு தான் அந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page