முகரம் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Spread the love

முகரம் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.


புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் மத நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி மற்றும் ஞாயிறு) முகரம் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சையது கல்பே ஜாவேத் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

 

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணை தொடங்கியதும் மனுதாரர் தரப்பில் பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கும், சில ஜெயின் கோயில்களின் நிகழ்ச்சிகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதை சுட்டிக் காட்டி முகரம் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “பூரி ஜெகநாதர் ரதயாத்திரை குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பொதுவான இடத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினால் தொற்று ஏற்படுவதாக குற்றம்சாட்ட வாய்ப்பு ஏற்படலாம். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதிக்கவில்லை” என்று கூறினார். பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page