ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்

Spread the love

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.

டெஹ்ரான்,

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். மாநாட்டில் சீன, ரஷ்ய, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சீன பாதுகாப்பு மந்திரியுடன் பேசிய ராஜ்நாத் சிங்,

 

எல்லையில் மிக விரைவில் பதற்றத்தை தணிப்பது மற்றும் படைகளை முழுவதுமாக விலக்குவது தொடர்பாக, ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தொடர வேண்டும். இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவின்படி இருதரப்பும் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

லடாக் எல்லையில் பங்கோங்சோ ஏரி உள்ளிட்ட மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் சீனா ஒத்துழைக்க வேண்டும்.

எல்லை மேலாண்மையில் இந்திய படைகள் எப்போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கின்றன. அதேநேரம் இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா தன் இறையாண்மையை விட்டுக்கொடுக்காது என்று கண்டிப்புடன் கூறினார்.

இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்டு ஈரான் வந்துள்ள ராஜ்நாத் சிங் ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்தித்து பேச உள்ளார். சந்திப்பின் போது இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பெர்சியன் வளைகுடா நாடுகள் நிலைமை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஈரானில் மேற்கொள்ளப்படும் இந்திய திட்டங்களை வேகப்படுத்தவும், ஈரானில் அதிகரிக்கும் சீன முதலீடுகள் குறித்தும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page