உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு

Spread the love

மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது.

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், உலக அளவில் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வருகிறது. உலக அளவில் இந்த அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் போலியோ சொட்டு மருந்து போன்ற தடுப்பு மருந்துகளை வாங்கி, அதாவது 2 கோடிக்கும் அதிகமான டோஸ்களை வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25-க்கு மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

அந்த நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சப்ளை செய்யும் மிகப்பெரிய பணியை யுனிசெப் முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக அதன் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போரே தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பு, பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு, கவி நிறுவனம், உலக வங்கி, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை பங்குதாரர்களாக கொண்டு அவற்றின் உதவியுடன் தடுப்பூசிகளை வாங்கி வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும், 28 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை யுனிசெப்புடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

2023-ம் ஆண்டு வரை அந்த நிறுவனங்கள் முழுவீச்சில் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் என்றும், முதலீட்டு ஆதரவை அவை எதிர்பார்ப்பதாகவும் ஹென்ரீட்டா போரே தெரிவித்து உள்ளார். தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கான நிதி முதலீடு தொடர்பாக வருகிற 18-ந் தேதிக்குள் உடன்பாடு கையெழுத்தாக இருப்பதாகவும் யுனிசெப் தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page