கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும் அக்கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசாரத்தின் போது கமலா ஹாரிஸ் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.இந்த நிலையில் தனது பிரசாரத்தின் போது கொரோனா தொற்று குறித்து பேசிய கமலா ஹாரிஸ் தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை எனக்கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றுநோயின் தீவிரத்தை டிரம்ப் நிர்வாகம் உணரவில்லை. வைரஸ் தொற்று ஏற்பட்ட நாள்முதல் அதை ஒரு புரளி என்றே டிரம்ப் கூறிவந்தார். அவர் சுகாதார நிபுணர்களை குழப்பிவிட்டார். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கூறும் கருத்துகளை கேட்க அவர் செவி சாய்த்திருந்தால், தொற்றுநோயின் தீவிரத்தை உணர்ந்திருக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து விடும் என ஜனாதிபதி டிரம்ப் கூறிவருகிறார்.இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன். வல்லுனர்கள் கூறுவதை மட்டும்தான் நான் நம்புவேன். டிரம்ப் கூறும் கருத்துகளை நான் நம்பமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.