தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

Spread the love

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.


சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,369 ஆண்கள், 2,407 பெண்கள் என மொத்தம் 5,776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 949 பேரும், கோவையில் 524 பேரும், கடலூரில் 398 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 29 பேரும், பெரம்பலூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 52 லட்சத்து 4 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 73 ஆண்களும், 1 லட்சத்து 86 ஆயிரத்து 154 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 52 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 61 ஆயிரத்து 452 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 53 பேரும், தனியார் மருத்துவமனையில் 36 பேரும் என 89 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் மதுரையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 4-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைப்போல் தென்காசியை சேர்ந்த 17 வயது சிறுவனும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் நேற்று தெரியவந்ததுள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையில் 16 பேரும், திருவள்ளூர், சேலத்தில் தலா 6 பேரும், கடலூர், புதுக்கோட்டையில் தலா 5 பேரும், திருவாரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், கோவையில் தலா 4 பேரும், அரியலூர், செங்கல்பட்டில் தலா 3 பேரும், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம், நாமக்கல், கன்னியாகுமரி, தர்மபுரியில் தலா இருவரும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருச்சி, விருதுநகரில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 925 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 930 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 215 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page