தமிழக சட்டசபை கலைவாணர் அரங்கத்தில் நாளை கூடுகிறது-இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

Spread the love

தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. 3 நாட்கள் நடக்க இருக்கும் இந்த கூட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அதற்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் காலை 10 மணிக்கு கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அங்கு சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 8-ந் தேதியன்று சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் சட்டசபையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்நாள் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யான எச்.வசந்தகுமார் ஆகியோரின் மறைவு மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மறைவு குறித்த இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

15-ந் தேதி, பல்வேறு அரசினர் அலுவல்கள் நடைபெறும். 16-ந் தேதி 2020-2021-ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படும். கொரோனா காலகட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பான அறிக்கையாக இது இருக்கும்.

துணை பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படும்.மேலும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்கள், அவசர சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. எனவே அரசியல் ரீதியான காரசார விவாதங்கள், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. இடையே ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அரசு மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த எதிர்க்கட்சிகள், அரசிடம் நேருக்கு நேர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பும். அதற்கு பதிலை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வழங்குவார்கள்.

‘நீட்’ தேர்வு, மின்சார கட்டணம், பிரதமர் கிசான் திட்ட முறைகேடு, மாநிலத்தின் பொருளாதார நிலை உள்பட பல்வேறு அம்சங்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான விவாதத்துக்கு உள்ளாகும். எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், இந்த கூட்டத்தொடரில் மிகுந்த முக்கியமாக கருதப்படும்.

மேலும், அரசுக்கு எதிராக காரசார விவாதங்கள், குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு போன்ற நிகழ்வுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிகுந்த பரபரப்புக்கு இடையே இந்த சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என்றே உணரப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page