தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

Spread the love

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,410 ஆண்கள், 2,283 பெண்கள் என மொத்தம் 5,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 149 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 796 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 994 பேரும், கோவையில் 490 பேரும், சேலத்தில் 309 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 16 பேரும், அரியலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 57 லட்சத்து ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 201 ஆண்களும், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 529 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 850 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 65 ஆயிரத்து 692 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 35 பேரும், தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 74 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 17 பேரும், சேலத்தில் 10 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 6 பேரும், கோவை, கடலூர், மதுரையில் தலா 4 பேரும், ஈரோடு, புதுக்கோட்டையில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் தலா இருவரும், தர்மபுரி, திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி, திருவாரூர், திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் என 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 381 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 717 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,228 பேரும், கோவையில் 554 பேரும், கடலூரில் 418 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 பேர் குணம் அடைந்து உள்ளனர். 47 ஆயிரத்து 12 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 888 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 218 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 65 அரசு மற்றும் 103 தனியார் நிறுவனம் என மொத்தம் 168 நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page