அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை

Spread the love

அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என அந்நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது.

இதையடுத்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் அல்லது டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்-டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன.
இறுதியில், ஆரக்கிள் நிறுவனம் டிக் டாக் செயலியுடன் கைகோர்த்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஏனெனில், வரும் 20 ஆம் தேதி முதல் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆராக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி கருத்து கூறிய டிரம்ப், இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்டான்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாக கூறப்படுகிறது.ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆய்வு செய்து இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும். தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page