எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க ஐகோர்ட்டு மறுப்பு

Spread the love

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.


சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், தனித்தேர்வர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தனித்தேர்வர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் நேற்று அவசர வழக்காக விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கொரோனா தொற்று காரணமாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து சி.பி.எஸ்.இ. விலக்கு அளித்துள்ளது. தமிழக அரசும் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஐகோர்ட்டு உத்தரவுப்படி தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

இதைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்வை எதிர்கொண்ட விதம், தேர்வின் போது ஏதேனும் சிரமம் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்ற அடிப்படையில் தமிழக அரசும், மனுதாரரும் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page