சுவாச துளிகள் மூலம் ‘குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும்’ – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Spread the love

குளிர்காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வரும் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘நானோ லெட்டர்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி பேராசிரியர் யானிங் ஜூ மற்றும் லீ ஜாவோ ஆகியோர் கூறியதாவது:-

பெரும்பாலான சூழ்நிலைகளில், நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த்துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம்.

குளிரான சூழலில், சுவாச நீர்த்துளிகள், தரையில் விழுவதற்கு முன்பாக 6 மீட்டருக்கு (19.7 அடி) அப்பாலும் பயணிக்கின்றன. ஏற்கனவே இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதாக வந்த புகார்களுக்கு இது விளக்கமாக இருக்கலாம். குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவலாம்.

அதே நேரத்தில் சூடான, வறண்ட இடங்களில் சுவாச நீர்த்துளிகள் எளிதில் ஆவியாகி விடுகின்றன. இத்தகைய நிலைமைகளில், ஆவியாகும் நீர்த்துளிகள் பேசும்போதும், இருமும்போதும், தும்முகிறபோதும் சுவாசத்தின் ஒரு பகுதியாக சிந்தப்படும் மற்ற தூசுப்படலம் மூலம் வந்த வைரஸ் துகள்களுடன் சேரும்.

இவை மிகச்சிறிய துகள்கள். பொதுவாக 10 மைக்ரான்களை காட்டிலும் சிறியவை. இவை காற்றில் பல மணி நேரம் இடைநிறுத்தப்படலாம். எனவே மக்கள் அந்த துகள்களை வெறுமனே சுவாசிப்பதன்மூலம் எடுத்துக்கொள்ள முடியும். கோடை காலத்தில் காற்றின்வழியே துகள்கள் பரவுவது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

அதே போன்று குளிர்காலத்தில் நீர்த்துளி தொடர்பு மிகவும் ஆபத்தானது.

இதன் பொருள், உள்ளூர் சூழலைப் பொறுத்து, இந்த நோய் பரவுவதைத் தடுக்க மக்கள் வெவ்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.

அறை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமாகவும் இருந்தால், அதிக தனி மனித இடைவெளியை பராமரிக்க வேண்டும். தற்போது பராமரிக்கும்படி கூறப்பட்ட 6 அடி தொலைவு போதாது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page